Wednesday, July 13, 2011

நீ எனக்கு யாராம்?

கிழக்கும் மேற்கும் திசைகளென்றேன்
நீ திசைகளென்ற ஒன்றே இல்லையென்றாய்,
வானம் முழுதும் நட்சத்திரம் என்றேன்..
வானம் என்பதே பொய் என்றாய்....

பூமியின் சுழற்சி இடமிலிருந்து வலமென்றேன்
அதுவும் ஒரு நாள் மாறுமென்றாய்,
பகலில் அத்தனையும் அழகு என்றேன்
பகலென்பதும் மட்டுமன்றி பகலவனே பொய்யென்றாய்!

நான், நேரென்பேன், நீ கோணலென்பாய்
நான் சந்தோசமென்பேன் நீ துக்கமென்பாய்
நான் காதல் என்பேன் அது மாயை என்பாய்
நான் வாழ்க்கை என்பேன் நீ மரணமென்பாய்
எல்லாம் முரண்களாக கொண்டு
எப்படி இயங்குகிறோம் ஒன்றாய் என்பேன்?

இயக்கம் என்பதில் முரணில்லை என்பாய்
நான் உன்னிடம் நெருங்கி வருவேன்
என் நெஞ்சினில் கூராய் கத்தியைச் சொருகுவாய்
உன்னை விட்டு தூரப் போவேன்...
தாயாய் என்னைக் கட்டியணைப்பாய்..!

நட்புமில்லை என்றாய், காதலுமில்லையென்றாய்
உறவுகளற்ற உணர்வென்றாய்
தளிர்களற்ற செடி என்றாய்
கனவுகளற்ற உறக்கமென்றாய்
கவிதைகள் இல்லா காதல் என்றாய்
சொல்லும் போதே செத்து விடும்
வார்த்தைகளை நீ மதியேனென்றாய்;

நான் இருக்கிறேன் என்றாய்
உடனேயே நான் இல்லை என்றாய்;
சோகம் என்றாய் ஆனால்...
அதில் சந்தோசம் என்றாய்!
எப்படி உன்னை கணிப்பதென்றேன்?
என்னை ஏன் கணிக்கிறாய் என்றாய்..?

நீ எனக்கு யாரென்றேன்?
காற்று உனக்கு யாரென்றாய்?
நான் திகைக்கிறேன் என்றேன்..
நீ நகைக்கிறேன் என்றாய்!
கடைசியில்...

எனக்கான காத்திருப்புகளில்
வராத என்னைத் தேடி தேடி
அழுதேன் என்றாய்...?
இப்போதாவது சொல்...

நீ எனக்கு யாராம்?

No comments:

Post a Comment