Friday, July 1, 2011

உனக்காய் என் அறிமுகம்

யாரோ எவனோ எப்பேற்பட்டவனோ
எனக் காத்திருந்து தரகர் கொடுத்த
நிழற்படத்தில் என்முகம் கண்டதும்
களவானியாய்த் திரிந்தவனோ
காவாளியாய் அலைந்தவனோ
என்றெல்லாம் எக்ஸ்ட்ராவாய்ப்
பயப்படும் என்னவளே! 

இதோ உனக்காய் என் அறிமுகம்.

பிறப்பு
 
கோயில் மாநகரில் நாயக்கமன்னர் காலம்தொட்டு
கௌரவமாய் வாழ்ந்துவரும் குடும்பத்தின்
பெயரைக்கெடுக்கப் பிறந்த புல்லுருவி நான்.
கொள்ளைபசியுடன் பிறந்த ஞானப்பிரகாசம் நான்
பிறந்த மறுநாளே எம்பாட்டனாரைக்
கொன்று தின்று விட்டதாக் ஊருக்குள் பேச்சு. 
இப்போதும் அடங்குவதில்லை நான்...!
வளர்ப்பு

அத்தனை பிள்ளைகளும் அமைதியாய் இருந்தாலும்
அடங்காமல் திரிந்த என்மேல்தான் பாசமதிகம்.
பலகாரம் சுட்டாலும், சீம்பால் கறந்தாலும்
தனிப்பங்கு எனக்கு. சாமி பங்கும் எனக்குத்தான்.
அடங்கி நடப்பது ஆன்மைக்கு இழுக்கு, 
சொல்பேச்சுக் கேட்பது கௌரவக் குறைச்சல்
அண்ணன் தம்பி ஆனாலும் பங்கு பாகம் வேறு
போன்ற அரும் கொள்கைகளுடன் கௌரவமாய் 
வளர்ந்த அப்பாவிக் குழந்தை நான்.  
அந்தக் குணம் இன்னமும் அப்படியே.
படிப்பு

எட்டாம் வகுப்பிலே கட்டடித்து
ஒன்பதாம் வகுப்பில் உண்டியல் உடைத்து
பத்தாம் வகுப்பில் ஹால் டிக்கட் வாங்கியதும்
வாத்தியாரையே ஆள் வைத்து அடித்து எனப்
படிப்படியாய் படிப்பில் முன்னேறியவன் நான்.


"
ஊருக்குள்ள மதிக்கமாட்டாய்ங்க" என்ற ஒரே காரணத்திற்காய் +2; 
அப்பாவின் கௌரவத்திற்காக
அலுப்புடன் ஒரு B.E.அம்மாவின் ஆசைக்காக
போனால் போகட்டும் என்று
பெருந்தன்மையுடன் ஒரு MBAபடித்த ஒழுக்கமான மாணவன் நான்.
பொறியியல் படிக்கச் சொன்ன போதே
"
அந்தக் காச்சக் கைல குடுங்க
நா வட்டிக்குவிட்டுப் பொழச்சுகிருவேன்"என்று சொன்ன என் நேர்மையை
யாரும் பாராட்டாதது
காலத்தின் கோலம்.
நட்பு

பங்காளி துணிஞ்சு செய்டா கேஸப் பாப்போம்
ஏறிச் செய் மாப்ள எவனையும் பாப்போம்
சங்கம் என்னடா பங்காளி நம்மள ஒதுக்கி வைக்கிறது? 
இந்த மானங்கெட்ட சங்கத்த நம்ம ஒதுக்கி வப்போம்
கூப்டு வாராதுக்குப் பழக்கம் எதுக்கு மாப்ள
என்றெல்லாம் சொல்ல மட்டும் அல்ல  
செய்தும் வந்திருக்கிற நட்பு எமது.மண்ணிப்பும்
நன்றியும் பழக்கமில்லை எங்களுக்குள்
எவன் வீட்டு விசேசத்திற்கும் எவனும்
அழைப்பு வைத்ததுமில்லை. போகாமல் இருந்ததுமில்லை.

எதிர்பார்ப்பு

எத்தனை சாதித்தாலும் வீட்டில்
படர்க்கையில் சுட்டும் போது "அது" என்றே
சுட்டுகிறார்கள் இன்னமும்.
"
அவர்" என்பதெல்லாம் அதீதம்.
"
அவன்" என்றாக்கினால் போதும். 
அஃறிணையாய் அறியப்பட்ட என்னை
உயர்திணையாய்க் காட்ட வேண்டும்

உறுதிமொழி
மறுபடியோர் ரிசஸன் வந்தாலும்
சாஃப்ட்வேர் லைனே கவிழ்ந்தாலும்
உனக்கு உண்ண உணவும், உடுக்க உடையும்
உறங்கத்தரையும் உத்தரவாதம்
தாத்தா புண்ணியத்தில்.

முடிவாய்.......
நுனிநாக்கு ஆங்கிலமும், ஹைஃபை நாகரீகமும்
பழக்கமில்லை எனக்கு. வெறுப்புமில்லை.பழக்கித் தந்தால் பழகிக் கொள்வேன்.
இத்தனைநாளென் மொத்தவாழ்க்கையும் இதோ
இந்த வரிகளுக்குள் கொஞ்சமும் மறைவின்றி
ஏற்பதும் மறுப்பதும் உன் முடிவு.
ஏற்றுவிட்டால்...
வசந்தம் உன் வாழ்க்கை எண்ணிக்கொள்.
பாரினில் செட்டிலாவதாகப் பெருமையுடன்
உன்னிடம் சொல்லும் உன் நண்பிகளிடத்தில் கம்பீரமாய்ச் சொல்
"
நான் சொர்க்கத்தில் செட்டில்டு" என்று

ஏற்காவிட்டால்....
உனக்கு .... நீ குடுத்து வச்சது அவ்ளோதான்.
எனக்கு? .... உலகம் பெருசு....

No comments:

Post a Comment