Wednesday, January 11, 2012

பறவைகளுடன் பேசுதல்

விக்கிரமாதித்தனுக்கு பறவைகளின் மொழி தெரியும்
என பாட்டி சொல்லிக்கொண்டிருந்த ராத்திரி
விக்கிரமாதித்தனானேன்
காலையில் முருங்கை மரத்திலமர்ந்த
தேன்சிட்டை அழைத்தேன்
அது பேச்சை அடித்துப் பறந்தது
எனக்கின்னும்
பறவைகளின் மொழி வசமாகவில்லை
கூட்டமாகவோ தனித்தோ பார்க்கும்போதெல்லாம்
அழைத்துப்பேச ஆசை
அழைப்பின் ஒவ்வோர்விசையும்
பறவை முகம் திருப்பிக் கொள்கிறது
சுவரில் தொங்கும் கொக்குகளின் ஓவியம்
பறவைகள் குறித்த ஒரு வெளிநாட்டுப் புத்தகம்
திருமண நினைவுப் பரிசாய் கிடைத்த
சிறகுகள் கொன்று சட்டமிடப்பட்ட
இறகுகளால் ஆன பறவைகள்
ஆற்றங்கரையில் கண்டெடுத்து வந்து
எறியாமல் வைத்திருக்கும் பலவண்ண இறகு
(
அவள் முகம் வருடி சிலிர்ப்பூட்ட உதவும்)புசிக்கக் கிடைக்கும் மாமிசம் என
பறவைகளின் குறுக்கீடுகள்
உள்ள வாழ்க்கையில்
எந்தப் பறவையையும் அருகில் பார்க்க
முடிந்ததில்லை
பார்க்க நினைப்பும் வருவதில்லை
ஆயிரம் மொழிச் சப்தங்கள் புதையுண்டிருக்கும்
காற்றை அகழ்ந்தால் எனக்கு
பறவையின் மொழி கிடைக்கலாம்
காற்றை அகழ்ந்திட
சிறகுகள் வேண்டும்
அதற்கும் மீண்டும் நான்
பறவைகளிடம்தான் போகவேண்டும்.

No comments:

Post a Comment